கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையில் நிகழக்கூடிய அற்புதமான தருணம். ஆனாலும் கர்ப்ப காலமான 9 மாத காலத்தை எதிர்கொள்வது என்பது பெண்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாகும். ஹார்மோன் மாற்றங்கள், உணவு முறையில் மாற்றம், முறையான தூக்கமின்மை என அவர்களின் வாழ்க்கையில் நிகழக்கூடிய அடிப்படை பழக்க வழக்கங்கள் அனைத்துமே முற்றிலுமே மாறிவிடும். இதோடு பல நேரங்களில் இந்த மாற்றங்களை அனுபவிப்பதே கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும். மனதளவில் நிகழக்கூடிய மாற்றங்கள் அனைத்தும் கோபத்தையும் ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மன உளைச்சல், ஹைப்பர் டென்சன் கர்ப்பிணிகளை மட்டுமல்ல, கருவில் இருக்கும் குழந்தைகளையும் வெகுவாக பாதிக்கும். குறிப்பாக தாய்மார்களுக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் கருவில் உள்ள குழந்தைகளின் மூளை செயல்திறனைப் பாதிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் நல்ல முறையில் பிரசவம் மற்றும் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளைப் பெற வேண்டும் என்றால், கர்ப்பிணிகளின் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இல்லையென்றால் பெரும் சிக்கல்களை அனுபவிக்க நேரிடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கானக் காரணங்கள்?
- முதல் முறை கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மனதளவில் ஒருவித அச்சம் ஏற்படும். இந்த பயமே முதல் முறை கர்ப்பமான பெண்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக அமையும்.
- குடும்ப உறுப்பினர்களின் யாருக்காவது கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம ஏற்பட்டிருந்தால், அக்குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஹைப்பர் டென்சன் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இந்த உடல் எடையை அளவுக்கு அதிமாகும் போது பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். மேலும் 35 வயதிற்கு மேல் கர்ப்பமாகும் பெண்களுக்கும் இப்பிரச்சனை ஏற்படக்கூடும்.
- நீரிழிவு நோய், கர்ப்ப காலத்தில் உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பதும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
- எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக அடிக்கடி குமட்டல், வாந்தி, தலைவலி, கர்ப்ப காலத்தில் திடீர் எடை அதிகரிப்பு, சிறுநீர் அதிகளவு வெளியேறுவது போன்ற அறிகுறிகளை நீங்கள் சந்திக்க நேரிட்டால் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.
பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
- கர்ப்ப காலத்தில் அலுவலகம் அல்லது வீடுகளில் எவ்வித பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மனதில் எடுத்துக் கொள்ளக்கூடாது. தியானம், யோகா, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டவும். இது உங்களை மனதளவில் நிம்மதியாக வைத்திருக்கும்.
- மருத்துவர்களின் பரிந்துரையில் பேரில் மருந்து, மாத்திரைகளை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிங்க:மாதவிடாய் காலத்தில் அதீத வயிற்று வலியா? அப்ப நீங்கள் செய்ய வேண்டியது?
கர்ப்ப காலத்தில் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால், வீடுகளிலேயே உயர் இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் டிஜிட்டல் மானிட்டர்களைப் பயன்படுத்தவும். உங்களது உடலில் எப்போது மாற்றங்கள் ஏற்பட்டாலும் ரத்த அழுத்தத்தைக் கண்காணித்துக் கொள்வதால் பெரும் பாதிப்பிலிருந்து குழந்தையையும், சேயையும் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image Credit:Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation