சமையல் செய்வதற்கு எப்போதுமே சில பொருட்களை அடுப்படியில் வைத்திருப்பது அவசியம். சமைத்து கொண்டிருக்கும் போது பாதியில் அடுப்பை ஆஃப் செய்துவிட்டு கடைக்கு சென்று பொருள் வாங்க முடியாது. அந்த காலத்தில் திருமணம் ஆகி வேறு ஊர் செல்லும் பெண்ணுக்கு பெரிய பாத்திரங்களில் சமைப்பதற்கு தேவையான பொருட்களை போட்டு கொடுப்பார்கள். 2-3 மாதங்களுக்கான பொருட்கள் அதில் இருக்கும். அடுத்தமுறை அம்மா வீட்டிற்கு செல்லும் போது மீண்டும் சாம்பார் பொடி, மிளகாய் தூள், குழம்பு தூள் எடுத்துச் செல்வார்கள். இதனால் சமைக்கும் போது எந்தவொரு மசாலா பொடியும் இல்லாமல் போகாது. அப்போதெல்லாம் மாத தொடக்கத்தில் மாவு மில்லுக்கு சென்று சமையலுக்கு தேவையான பொருட்களை அரைத்து மாதம் முழுக்க பயன்படுத்துவார்கள். பாக்கெட்களில் மசாலா பொடி வந்த பிறகு திருமணம் ஆன மகளுக்கு பொருட்கள் கொடுக்கும் வழக்கத்தை தாய்மார்களும் மறந்துவிட்டனர். இந்த பதிவில் கரம் மசாலா, குழம்பு மிளகாய் தூள் எப்படி செய்வது என பார்க்கலாம். குழம்பு மிளகாய் தூளும், ஒரு காய்கறியும் போதும் கால் மணி நேரத்தில் ஒரு குழம்பு தயாரித்து விடலாம். கரம் மசாலா உணவின் சுவையை அதிகப்படுத்தி கொடுக்கும். கரம் மசாலா, குழம்பு மிளகாய் பொடி செய்முறையில் சரியான விகிதத்தில் பொருட்கள் பயன்படுத்த வேண்டும்.
கரம் மசாலா செய்ய தேவையானவை
- பிரிஞ்சி இலை
- பச்சை ஏலக்காய்
- முழு தனியா
- கருப்பு ஏலக்காய்
- பட்டை
- இலவங்கம்
- ஜாவித்ரி பூ
- மிளகு
கரம் மசாலா செய்முறை
- கடாயில் முழு தனியா அரை கப், 5 பிரிஞ்சி இலை, 5 பச்சை ஏலக்காய், 7 கருப்பு ஏலக்காய், 3 பட்டை, ஒரு ஸ்பூன் இலவங்கம், 5 ஜாவித்ரி பூ, ஒரு ஸ்பூன் மிளகு போட்டு குறைவான தீயில் சில நிமிடங்களுக்கு வறுக்கவும்.
- இவற்றை வறுத்த பிறகு கைகளில் உடையும் பக்குவத்தில் இருக்க வேண்டும். ரொம்பவும் வறுத்து கருக்கிவிடக்கூடாது.
- பொருட்களை இந்த அளவுகளில் பயன்படுத்தினால் 50 முதல் 60 கிராம் கரம் மசாலா கிடைக்கும். வறுத்த பிறகு சூடு குறைந்ததும் மில்லில் கொடுத்து அரைக்கவும்.
- சல்லடையில் போட்டு அதன் பிறகு பயன்படுத்தவும். அரை கிலோ சிக்கனுக்கு அரை ஸ்பூன் கரம் மசாலா என்ற அளவில் பயன்படுத்தலாம்.
மேலும் படிங்கவீட்டிலேயே தயாரித்த சாம்பார், ரசப் பொடி; சுவையும் மணமும் அள்ளுதே
குழம்பு மிளகாய் பொடி செய்ய தேவையானவை
- காய்ந்த மிளகாய்
- கறிவேப்பிலை
- வெந்தயம்
- சீரகம்
- கடலை பருப்பு
- துவரம் பருப்பு
- முழு தனியா
- நீட்ட மஞ்சள்
- மிளகு
- சுக்கு
- கடுகு
குழம்பு மிளகாய் பொடி செய்முறை
குண்டு மிளகாய் ஒரு கிலோ, கறிவேப்பிலை 150 கிராம், வெந்தயம் 50 கிராம், சீரகம் 100 கிராம், கடலை பருப்பு 100 கிராம், துவரம் பருப்பு 100 கிராம், மஞ்சள் 100 கிராம், முழு தனியா ஒரு கிலோ, மிளகு 100 கிராம், சுக்கு 100 கிராம், கடுகு 100 கிராம் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு வெயிலில் காய வைக்கவும்.
- கடாயில் இவற்றை தனித்தனியே குறைந்த தீயில் வறுக்கவும். கடுகு, வெந்தயம் ரொம்பவும் வறுத்தால் கசப்புத்தன்மை ஏற்படும். கவனமாக இருங்கள்.
- வறுத்த பிறகு மாவு மில்லில் கொடுத்து 3 முறை அரைத்து வாங்கவும். பாத்திரத்தில் போடும் முன்பாக பேப்பரில் கொட்டி 2 மணி நேரத்திற்கு சூடு ஆறவிடுங்கள். அதன் பிறகு பாத்திரத்தில் போட்டு இறுக்கமாக மூடிவிடுங்கள்.
- குழம்பு மிளகாய் பொடியை சூட்டில் மூடினால் சுவை மாறிவிடும். சூப்பரான கரம் மசாலா, குழம்பு மிளகாய் தூள் ரெடி.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation