ரோஜா கூட்டம், பம்பர கண்ணாலே, பார்த்திபன் கனவு, போஸ், நண்பன், பூ, ஜூட் படங்களின் கதாநாயகன் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்கைன் என்ற போதைப் பொருளை பயன்படுத்தியது இரத்த பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த்தை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேறு யாரெல்லாம் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர் என விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கழுகு, யாமிருக்க பயமேன் ஹீரோ கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக செய்திகள் உலா வருகின்றன. இதன் உண்மைத்தன்மை விரைவில் தெரியவரும்.
கொக்கைன் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த்
கடந்த வாரம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் போதைப் பொருள் வழக்கில் காவல்துறையினர் இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களின் செல்போனை சோதித்த போது போதைப் பொருள் பலருக்கு கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. விவரங்களை சேரிகரித்த காவல்துறையினர் ஜூன் 23ஆம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த்தை விசாரணைக்கு அழைத்தனர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்தின் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி ?
அரசியல் கட்சி ஒருவரிடம் போதைப் பொருள் வாங்கி அதை ஸ்ரீகாந்த் பயன்படுத்தியுள்ளார். அந்த நபர் தயாரிக்கவிருந்த தீங்கிரை படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஒரு கிராம் 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாய்க்கு போதைப் பொருளாக வாங்கியுள்ளனர். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டை சேர்ந்த நபரிடம் இருந்து போதைப் பொருள் பெற்று பயன்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீகாந்தின் திரைப்பயணம்
ஸ்ரீகாந்த் 1999ல் கே.பாலசந்தரின் ஜன்னல் டிவி தொடரின் மூலமாக அறிமுகமானவர். அதன் பிறகு 2002ல் ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நண்பன் படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். இந்தாண்டு அவர் நடித்த க்ரைம் வெப் தொடர் ஒன்று ஓடிடி தளத்தில் வெளியானது. வந்தனா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் ஸ்ரீகாந்திற்கு உண்டு.
கனா கண்டேனடி என பாடல் பாடிய ஸ்ரீகாந்தை போதைப் பொருள் பயன்படுத்தி கனா கண்டதற்காக காவல்துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் திரையுலகை சேர்ந்த பல பெரிய தலைகள் உருளக்கூடும் என பேசப்படுகிறது. போதைப் பொருள் பயன்பாடு உடலுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும், நாட்டுக்கும் தீங்கு.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation