ஆந்திரா மெஸ் சென்று மீல்ஸ் ஆர்டர் செய்தால் வாழை இலை போட்டு கூட்டு, ஊறுகாய், வடகம், கலர் அப்பளம் வைத்த பிறகு சுட சுட சாதம் வைப்பார்கள். வழக்கம் போல் சாம்பாரில் இருந்து தொடங்க நினைத்தால் பருப்பு பொடி தருவார்கள். தமிழகத்தில் உள்ள எந்த உணவகத்திலும் சாம்பார், குழம்பு தான் முதலில் வைப்பார்கள். ஆந்திரா மெஸ் மட்டுமல்ல ஆந்திராவில் எங்கு சென்றாலும் சூடான சாதத்தில் பருப்பு பொடி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடுவதை பார்க்க முடியும். இது தோசை, இட்லிக்கு தொட்டு சாப்பிடும் பொடியல்ல. இதன் ருசி அவ்வளவு அருமையாக இருக்கும். பொடியுடன் சாதம் சாப்பிடுவதா என நினைக்காதீர்கள். ஒரு முறை இந்த பருப்பு பொடியை சாப்பிட்டு பாருங்கள். ஆந்திரா மீல்ஸ் பக்கம் அடிக்கடி செல்வீர்கள். ஆந்திராவில் இதற்கு கண்டி பொடி, கன் பவுடர் என பெயர்கள் உண்டு. இதன் செய்முறைக்கு பத்துக்கும் குறைவான பொருட்கள் போதும்.
கண்டி பொடி செய்முறை
- கடாயில் எண்ணெய் எதுவும் ஊற்றாமல் அரை கப் துவரம் பருப்பு போட்டு குறைந்த தீயில் வறுக்கவும்.
- 8-10 நிமிடங்களில் நன்கு வறுபட்டு நிறம் மாறியவுடன் நறுமணம் வெளிப்படும். அடுப்பில் இருந்து எடுத்து சூடு ஆறவிடவும்.
- அடுத்ததாக கால் கப் கடலைப் பருப்பு போட்டு அதே போல குறைந்த தீயில் வறுக்கவும். இந்த பருப்பு ஐந்து நிமிடங்களில் வறுபட்டுவிடும்.
- இதன் பிறகு கால் கப் பாசிப் பயிறு போட்டு வறுக்கவும். இடையே ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் 12-15 வர மிளகாய் போட்டு வறுக்கவும். காரத்திற்கு ஏற்ப மிளகாய் பயன்படுத்தவும்.
- உங்களிடம் குண்டூர் மிளகாய் இருந்தால் அதை பயன்படுத்துங்கள். கூடுதல் சிறப்பு...
- சூடு ஆறிய பிறகு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கால் டீஸ்பூன் பெருங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பவுடராக அரைக்கவும்.
- ஆந்திராவில் கண்டி பொடிக்கு பெரும்பாலும் பூண்டு சேர்ப்பதில்லை. நீங்கள் சேர்ப்பதாக இருந்தால் கடாயில் பத்து பல் பூண்டு போட்டு ரோஸ்ட் செய்து அரைக்கும் முன் சேர்க்கவும்.
- சூடான சாதத்தில் இரண்டு ஸ்பூன் பவுடர் போட்டு நெய் ஊற்றி சாப்பிடுங்கள். அட அட டே என்ன ருசி...
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation