திருமண வயது வந்த பெண் அல்லது ஆண்களுக்கு வரன் தேடும்போது, ராசி பொருத்தம் பார்த்து ஜாதகத்தில் உள்ள தோஷங்களை முதன்மையாக கவனிக்கின்றோம். திருமணம் செய்ய ராசி பொருத்தம் எவ்வளவு முக்கியமோ அதே போல இந்த தோஷங்களும் முக்கியம். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தோஷம் இருக்கும். இதில் மிக முக்கியமானது செவ்வாய் தோஷம். இது திருமணத்திற்கு தடையாகக் கருதப்படுகிறது. அந்த வரிசையில் செவ்வாய் தோஷத்தின் விளைவுகள் மற்றும் தீர்வுகள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், அது செவ்வாய் தோஷம் எனப்படும். இந்தத் தோஷம் உள்ள நபர்களுக்கு ஏற்புடைய ஜாதகம் கொண்டவர்களையே திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடம் கூறுகிறது. இருப்பினும், இதற்கு சில மாற்று வழிகளும் உள்ளன.
செவ்வாயின் தாக்கம்:
செவ்வாய் கிரகம் இரத்தம், கோபம், வீரம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்தக் கிரகத்தின் செல்வாக்கு அதிகம் உள்ளவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்களாகவோ அல்லது கடுமையான குணம் கொண்டவர்களாகவோ இருப்பார்கள். இவர்களின் தன்மை திருமண வாழ்வில் பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தலாம். கோபம் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள், துணையிடம் அதிக ஆசை அல்லது பிணக்கு மற்றும் தாம்பத்திய உறவில் சமநிலையின்மை. இதனால் தான் செவ்வாய் தோஷம் திருமணத்திற்கு தடையாக பார்க்கப்படுகிறது.
திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள்:
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் துணையிடம் ஆழ்ந்த ஈர்ப்பு அல்லது கருத்து மோதல்களை உண்டாக்கலாம். ஒருவருக்கு தாம்பத்திய வாழ்வில் அதிக ஆர்வம் இருந்தாலும், மற்றவருக்கு அதில் சலிப்பு ஏற்பட்டால், இது பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். காலப்போக்கில், இது விவாகரத்து அல்லது பிரிவினைக்கு காரணமாகலாம்.
மேலும் படிக்க: வசிய பொருத்தம் இல்லாமல் கல்யாணம் பண்ணலாமா? திருமண உறவு எப்படி இருக்கும்?
செவ்வாய் தோஷத்திற்கான தீர்வுகள்:
இந்தத் தோஷத்திற்கு சிறந்த தீர்வு ஜாதகப் பொருத்தம் ஆகும். திருமணம் செய்யும் ஆணின் ஜாதகத்தில் 7 அல்லது 8 வது இடத்தில் செவ்வாய் இருந்தால், பெண்ணின் ஜாதகத்திலும் அதே நிலை இருக்க வேண்டும். 2, 4 அல்லது 12 வது இடத்தில் செவ்வாய் இருந்தாலும் இதை பின்பற்றப்பட வேண்டும். ஆனால் காதல் திருமணங்களில் இந்த விதிகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை.
காதல் திருமணத்தில் செவ்வாய் தோஷம்:
காதலித்து திருமணம் செய்யும் தம்பதிகளில் ஒருவருக்கு மட்டும் செவ்வாய் தோஷம் இருந்தால், அது பெரிய பிரச்சினையாகாது. ஏனென்றால் தோஷம் என்பது கர்ம வினையின் விளைவு மட்டுமே, மரணத்தை உறுதியாக்குவதில்லை. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால், இந்தத் தோஷம் குறைந்துவிடும். அன்பு, பொறுமை மற்றும் சமரசம் ஆகியவை இத்தகைய தோஷங்களை சமாளிக்க உதவும் என்று ஜோதிடம் கூறுகிறது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணத்தில் சில சவால்களை எதிர்கொள்ளலாம். ஆனால் ஜாதகப் பொருத்தம், பரஸ்பர புரிதல் மற்றும் மன அமைதி ஆகியவற்றைப் பின்பற்றினால், இந்தத் தோஷத்தை சமாளித்து விடலாம்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation