தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் கட்டிடக்கலை மற்றும் கோவில்களுக்கு அந்த எவ்வளவு சிறப்பு வாய்ந்தது அதே போல் பாரம்பரிய உணவு வகைகளுக்கும் சிறப்பு வாய்ந்தது. அப்படி தஞ்சாவூரில் பிரபலமான பாரம்பரிய உணவுகளில் ஒன்று தான் ஒரப்படை. ஒரப்படை என்றால் ஒரப்பான அடை அதாவது காரமான அடை என அர்த்தம். தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காலை உணவாக ஒரப்படை சாப்பிடும் வழக்கம் உள்ளது. மொறுமொறுப்பாகவும் காரமாகவும் இருக்கும் இந்த தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படையை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரப்படை செய்ய தேவையான பொருட்கள்
- 1 கப் - பச்சரிசி
- 1 கப் - புழுங்கல் அரிசி
- 1 கப் - கடலை பருப்பு
- 1 கப் - துவரம் பருப்பு
- 1 கப் - கருப்பு உளுந்து
- 1 டீஸ்பூன் - சோம்பு
- 6 - வரமிளகாய்
- 1/2 கப் - பொடியாக நறுக்கிய சுரைக்காய்
- 1/2 கப் - பொடியாக நறுக்கிய தேங்காய்
- 1/2 கப் - நறுக்கிய சின்ன வெங்காயம்
- 1/2 கப் - கொத்தமல்லி
- 1/2 கப் - கறிவேப்பிலை
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு பெருங்காயம்
- தேவையான அளவு எண்ணெய்
மேலும் படிக்க :ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான முட்டை பூண்டு மசாலா! டேஸ்டே தனி...
ஒரப்படை செய்முறை
- பச்சரிசி, புழுங்கல் அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் கருப்பு உளுந்து ஆகிய அரிசி மற்றும் பருப்புகளை ஒரு பவுலில் ஒன்றாக சேர்த்து தண்ணீரில் நன்றாக அலசவும்.
- அரசி மற்றும் பருப்புகளை தண்ணீரில் அலசிய பின் அதே பவுலில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- உங்கள் காரத்திற்கு தேவையான அளவு வரமிளகாய், சோம்பு மற்றும் தேவையான அளவு உப்பை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- இதையடுத்து ஊற வைத்த அரிசி மற்றும் பருப்புகளை அரைத்த வரமிளகாய் கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ரொம்ப நைஸாக அரைக்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
- பின்னர் அரைத்த மாவை ஒரு பவுலில் மாற்றி அதில் தேவையான அளவு பெருங்காயம் மற்றும் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- தொடர்ந்து அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய சுரைக்காய், தேங்காய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- அனைத்தையும் மாவில் சேர்த்து நன்றாக கலந்தால் மாவு கெட்டியான பதத்தில் இருக்கும். அதை 15 முதல் 20 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.
- ஒரப்படை செய்வதற்கு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் ஒன்றரை கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் சேர்த்து தட்டையான அளவு பரப்பி வேக வைக்கவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து ஒவ்வொன்றாக 5 நிமிடம் வேக வைத்து பொன்னிறமாக மாறியதும் எடுத்தால் டேஸ்ட்டியான ஒரப்படை ரெடி.
தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படையை வெண்ணெய், வெல்லம் அல்லது தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation